Thursday, April 7, 2011

கருணாநிதி ஏன் வெற்றி பெற கூடாது?

தமிழகத்தில் ஏதோ பாசிச ஆட்சி நடப்பதால் , தமிழகத்தை காப்பாத்த போறதா சொல்லி  ஜெயலலிதா ஓட்டு கேட்குறார். தமிழகத்துக்கு விடுதலை வாங்கி தர கேப்டன் ஊரு ஊரா போயி பொலம்புறாரு சாரி பேசுறாரு, அ தி மு க மகா சக்தி கூட்டணிங்கிறாரு தா பாண்டியன். இதுக்கெல்லாம் ஒரு படி மேலே போயி நம்ம ஜிலேபி புகழ் சந்திரபாபு நாயிடு வாங்கின பேட்டாவுக்கு வேலை செய்யணுமேன்னு தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்குதுன்னு வேற சொல்லுறாரு. ஊழல் கூட்டணியை ஒழித்து கட்டுங்கள்னு ஜெய்லலிதா கூட கூட்டணி வச்சிட்டு  பிரகாஷ் காரத் பிரச்சாரம் பண்ணுறாரு இப்புடி எல்லோரும் கலைஞரை  போட்டு தாக்கி பிரச்சாரம் செய்து வரும் வேளையில்..

கலைஞர் ஒன்றும் நல்லவரும் அல்ல முற்றும் துறந்த முனிவரும் அல்ல..தெய்வ திருமகனும் அல்ல. இவங்க எல்லாம் இப்படி பேசுறதுக்கு தகுதி ஆனவங்க தானா என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்..பாசிசம் அப்படின்னா என்ன அர்த்தமென்று தெரியுமா அந்த அம்மையாருக்கு ? பாசிசம் என்ற வார்த்தையை வைகோ தான் ஜெயலலிதாவிற்காக கண்டு பிடித்தார், இப்போது அதை அந்த அம்மாவே உபயோகபடுத்துறது தான் ஹைலைட்..

ஊழல் கூட்டணி ஊழல் கூட்டணி என்று தெருவுக்கு தெரு முழங்கும் பீச்சாங்கை சாரிகளே போன தேர்தலில் இதே முழக்கத்தை தானே முழங்கினீர்கள்.. இந்த ஐந்து வருடத்தில் அந்த அம்மா எந்த புண்ணிய நதியில் போயி மூழ்கி ஊழல் பாவங்களை கழுவி பரிசுத்தவதி ஆனார்.. ஆனா  ஒண்ணுங்க நாம எல்லாரும் ராமதாசை தான் குரங்கு குப்பன்னு சொல்லுவோம்.. ஆனா உண்மையிலேயே இடது சாரிகள் மட்டும் தான் ராமதாசை விட தமது கொள்கைகளுக்காக (??) அடிக்கடி தாவியிருக்காங்க.. எப்புடியாவது ஆளுங்கட்சியை தோற்க்கடிக்கணும்ணு எதிர்கட்சி கூட சேர்ந்து பிரச்சாரம் பண்ணுவாங்க, அதே கட்சி ஆளுங்கட்சி ஆகிட்ட திரும்பவும் யாரு எதிர்கட்சியே அவங்க கூட சேர்ந்து கவுக்குற வேலைய பாப்பாங்க.. ஆனா எல்லா தேர்தலிலும் அவங்க பண்ணுற ஊழலுக்கெதிரான பிரச்சாரம் மட்டும் மாறவே மாறாது. அவங்களுக்கு நாட்டை ஆளவும் தெரியாது, அடுத்தவங்கள ஆள விடவும் பிடிக்காது..

இப்போ எல்லாரும் முழங்குறது ஊழல் கூடி போச்சு, விலைவாசி ஏறி போச்சி, கரண்ட் கட் ஆகி போச்சி, கட்ட பஞ்சாயத்தும் ரவுடிசமும் கூடி போச்சி இத்யாதி இத்யாதி ஆயி போச்சி.. இதுக்கெல்லாம் தேவை அம்மா தலைமையிலான ஆட்சி..

இந்த எல்லா பிரச்சினைகளும் அம்மா வந்தால் சரி ஆகி விடுமா ? ஜெயலலிதா வந்தால் ஊழலை ஒழிக்க முடியுமா ?? அது அவ்வளவு சுலபமான விசயமா ? கலைஞர் ஆட்சியிலயாவது 100 ரூபாய் திட்டத்துக்கு 30 ரூபாய் அடிச்சுட்டு மீதி 70 ரூபாய்க்கு மக்களுக்கு ஏதாவது செய்வாங்க.. ஆனா அம்மா வந்தா எல்லாரும் சுரண்டிட்டு போக மீதி 30 ரூபாயாவது  மக்களுக்கு போயி சேருமாங்கிறதே சந்தேகம் தான்.

யாரு ஆண்டாலும் விலைவாசி என்பது இறங்குறதுக்கு வாய்ப்பே இல்லை. மீண்டும் அந்த காமராஜரே ஆட்சிக்கு வந்தாலும் கூட..

அப்புறம் அம்மா வந்தா மின்வெட்டு தீர்ந்துடுமாம்.. அம்மா எங்கேயிருந்து கரண்ட் எடுத்து கொடுக்க போறாங்கன்னு சொன்னா பரவாயில்லை.. கருணாநிதி 2006 ல் பொறுப்பேத்ததுலேயிருந்து  அ தி மு க ஆட்சியில மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்கலைன்னு குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காரு.. ஏதோ அவங்க வந்து தான் புதிய மின் திட்டங்களை எல்லாம் உருவாக்க ஆரம்பிசிருக்கோம் , இன்னும் மூணு வருசத்துல தமிழகம் மின்சார தன்னிறவை  அடைஞ்சிடும்னு சொல்லுறத பாத்தா அம்மா ஆட்சிக்கு வந்தாலும் கொறஞ்சது மூன்று வருடங்களுக்கு அதே மின்வெட்டு நிலைமை தான்..

கட்டபஞ்சாயத்துக்களும் , ரவுடிசமும் பண்ணுற ஆளுங்க வேணும்னா மாறுவாங்களே தவிர இந்த ரெண்டையும் அறவே ஒழித்து விட கலைஞராலும் முடியாது, புரட்சி தலைவியாலும் முடியாது.. மன்னார்குடி வகையறாக்கள் போயஸ் கார்டனிலேயே இருந்து வேட்பாளர் பட்டியல் மாத்தினதையே அம்மாவால கண்டு பிடிக்க முடியலயாம்(உபயம்: தினமலர்) .. அப்படின்னா வெளியே நடக்குற கட்டப்பஞ்சாயத்துக்களை எப்படி ஒழிக்க முடியும்.

இலவசம் கொடுத்து கொடுத்து கலைஞர் தமிழகத்தை கடனில் மூழ்கடிக்கிறாருன்னு சொல்லி தான் அந்த அம்மா கடந்த அஞ்சு வருசமா கொட நாட்டுல இருந்து அரசியல் நடத்திச்சி..இப்போ அவங்களே ஒரு லட்டுக்கு பதிலா ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு தேர்தல் அறிக்கை விட்டுருக்காங்க.. ஆகையால இந்த விசயத்துலேயும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.

அப்புறம் இந்த ஈழ தமிழர்கள் விசயம்.. கலைஞர் ஈழத்தமிழருக்காக எதையும் செய்ய வில்லை தான் , ஆனா அது தான் உண்மை.. அவரல் ஒண்ணுமே செய்ய முடியாதுங்கிற விசயத்தை ஏற்கனவே ராமதாசும், வைகோவும் இன்ன பிற ஈழ ஆதரவு தலைவர்களும் ஓப்பன் ஸ்டேட்மன்டே விட்டுருக்காங்க.. ஒண்ணும் பண்ண முடியாதவர் எதுவுமே செய்ய்லைன்னு சொல்லுறது சரியில்லை.. ஈழத்தமிழர்களுக்காக தியாகம் பண்ணுறேன் பேர்வழின்னு  மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்காம வெளியே வந்தா அடுத்த நொடியே அம்மா மத்திய அரசுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.. இதுனால அவரோட பதவி போறது மட்டும் தான் மிச்சம்.. ஆனா கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஒண்ணுமே செய்ய முடியலயேன்னு கண்டிப்பா ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பார்.. ஆனா அந்த ஒரு சொட்டு கண்ணீர் கூட அம்மையார் சிந்தி இருக்க மாட்டார்.


இப்படி எந்த விசயத்தை எடுத்து பார்த்தாலும், கடைசியில்  எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுக்காம பொறுப்பா நிதானமா முடிவு எடுப்பதாலும், எதிரியையும் மன்னிச்சு சரிக்கு சமமா உட்கார வச்சி பேசுறதினாலும், கூட்டணி கட்சியினரை மதிக்கிற தன்மையாலும் , ஏதோ ஒரு கட்சி கூட்டத்துல பேசினா ஒரு மாசம் சொகுசு பங்களாக்களில் ஓய்வெடுக்காமல், இந்த வயதிலும் (யாருக்காக உழைக்கிறாரோ அது வேற விசயம்) சுறுசுறுப்பா வேலை செய்யிறதினாலேயும், யாரும் எப்போதும் போயி அவரை சந்திக்கலாம்கிறதுனாலேயும், நான் , எனது ஆட்சி என்ற திமிர் இல்லாததுனாலும், கூட்டணி கட்சியினரை கேட்டுக்கு வெளியே நிக்க விடாமல் உட்கார வச்சி பேசுறதினாலும் கலைஞரே இந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார். ஏதோ சில நல்ல திட்டங்களான காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் எல்லாம் போட்டு நகரவாசிகளை விட கிராமவாசிகள் மனதிலும் இடம் பிடிச்சிருக்கிறாரு.. அதுனால் மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால் எதிர் கட்சிகள் கொக்கரிப்பது போல குடி ஒண்ணும் மூழ்கி போயிடாது...

நம்மக்கிட்டே சொந்தமா இருக்குற ரெண்டு சட்டையுமே அழுக்கா இருக்கும்போது , புதிய சட்டை வாங்க கடையும் பக்கத்துல இல்லைங்கிற நிலைமை வரும்போது எந்த சட்டை கொஞ்சமா அழுக்கா இருக்கோ அதை எடுத்து போடுறதுல ஒண்ணும் தப்பில்ல.. நம்ம நாயக்கர் சொன்னது மாதிரி  நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை..