Sunday, April 10, 2011

கலைஞர் டிவியில் 'ஜெயலலிதா, சசிகலா' புலம்பல்!

சென்னை: அரசியல் கட்சிகளின் டிவிகளில் இடம் பெறும் விளம்பரங்களில் இன்று கலைஞர் டிவியில் வெளியான ஒரு விளம்பரம் அனைவரையும் கவருவதாக உள்ளது. காரணம், திமுக அரசின் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் புகழ்ந்து கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.

தேர்தல் பிரசார சமயத்தில் ஏராளமான நூதனங்களைக் காணும் பாக்கியம் மக்களுக்குக் கிடைக்கும். காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள். கும்பிடுவார்கள், உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி ஓட்டுப் போடுங்கள் என்று கெஞ்சுவார்கள். இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள் ஓட்டைக் கேட்பதற்காக.

இப்போது எலக்ட்ரானிக் காலமாகி விட்டதால் நூதன விளம்பரங்களின் தாக்கமும் அதிகமாகியுள்ளது.

இந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் டிவிகளில் அவரவர் திறமைக்கேற்ப வித்தியாசமான விளம்பரங்களைப் புகுத்தி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

இதில் திமுக சற்று ஒரு படி மேலே போய், ஜவுளிக்கடை விளம்பரங்களுக்கு எடுக்கப்படுவது போல தனது ஆட்சியின் திட்டங்களை விளக்கும் வகையில் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது.

இன்று ஒரு நூதன விளம்பரம் வெளியானது. அதில் ஜெயலலிதாவைப் போல ஒரு பெண்மணியும், சசிகலாவைப் போல ஒரு பெண்மணியும் தனி அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பு ஒரு டேபிள் உள்ளது - மதுக் கடை பார்களில் இருப்பது போல.

அதில் ஜெயலலிதாவைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்மணி, திமுக அரசின் திட்டங்கள் மக்களை கவர்ந்து விட்டதாக கூறி புலம்புகிறார். அதற்கு சசிகலா போன்ற தோற்றத்தில் உள்ள பெண், நாம் ஆட்சிக்கு வந்தால் அதையெல்லாம் ரத்து செய்து விடலாம் அக்கா என்று ஆறுதல் கூறுகிறார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்படும் 'ஜெயலலிதா', இதன் மூலம் ஏழைகளையெல்லாம் மயக்கி விட்டாரே கருணாநிதி என்று புலம்புகிறார்.

வித்தியாசமான இந்த விளம்பரம் அனைவரையும் கவர ஆரம்பித்துள்ளது.

இது போதாதென்று முன்பு திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவின்போது ரஜினிகாந்த், சரத்குமார், ராகவா லாரண்ஸ் உள்ளிட்டோர் கருணாநிதி அரசின் திட்டங்களைப் பாராட்டிப் பேசியதையும் இப்போது தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தி வருகிறது திமுக. இதுவும் கலைஞர் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.




எப்புடி எல்லாம் யோசிக்கிராயிங்க..இந்த விசயத்தில் ஜெயா டிவிக்கு அனுபவம் இன்னும் பத்தலை.. அம்மாவை கண்டவுடன் கால விழுந்தும், கன்னத்துல போட்டும் அம்மாவை ஏமாத்துற கட்சிக்காரங்க மாதிரி ,  ஜெயா டிவில வேலை பாக்குறவங்களும் ஏதோ கடமைக்கு மாச சம்பளம் வாங்குறதுக்கு வேலை பாக்குறாங்களே.. அம்மாவுக்கு வாச்சதும் சரியில்லை , ஜெயா டிவில வாசிக்கிறதும் சரி இல்லை..